Sunday, June 6, 2021

நம் வளம்

" என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் " என்று அ.மருதகாசி ஒர் பாடல் எழுதியுள்ளார்.இப்பாடலின் நவீன ராகமே நமக்கு தெரியும் அதுவே தொல்லைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்யபடுகிறது இது செய்தியில்லை ! செய்தி வேறு ! ஜுன் 4 இரவு முதல் ஜுன் 6 காலை வரை இணையம் சடங்காக கொண்டாடும் நிகழ்வு ஒன்று உள்ளது.சில ஆகச் சிறந்த நல்லோர் மட்டுமே விவரம் தெரிந்து ஜூன் -5 " உலக சுற்றுச்சூழல் தினம்" இந்நாள் சாதி, மத , இனம் மற்றும் நாடுகள் மறந்து கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய திருநாள் என்று பேசுவர்.பேசியதோடு இன்றி அன்று சில மரங்களும் நடுவர் ! நட்டது சில ! எடுத்துக்கொண்ட படங்கள் பல! இந்த நிகழ்வு நடந்ததற்கு நாளிதழ்கள் சாட்சிகளாக உள்ளன.நட்ட எத்தனை மரங்கள் வளர்ந்து சாட்சிகளாக இன்று நின்றுள்ளது? இக்கேள்வி கேட்டதாலே உங்கள் கடுஞ்சினம் என் பக்கம் இருக்கும்.இந்த கேள்விகளும் இலவச இணைப்பாக வந்திருக்கும் " உனக்கென்ன அக்கறை , மாமனா ? மச்சனா ? என வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் கூட என்னை நோக்கி வரலாம்.

நாள் ஓட்டத்தில் உயிர் பிழைக்க ! தொடர்ந்து வாழ ஓடுகள வீரர்களை விட வேகமாக ஓடவேண்டிய காலத்தில் இதற்கெல்லாம் எங்கே நேரம்? இந்த பூமி பந்தில் நாம் வாழும் நாள் எல்லாம் நம்மை தாங்கும் இயற்கைக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? அடப்போப்பா ? இந்த காலத்தில் கருவில் சுமந்த தாய்க்கே கருணை இல்லத்தில் இடம் தேடுகிறோம் ‌.இதற்கு ஏன் நேரம் செலவு செய்ய வேண்டும் என்றும் ஓர் சிலர் கேட்கலாம்.

" வெற்றி மேல் வெற்றி தான் நம்ம கையிலே! வெள்ளிக்காசு என்றுமே நம்ம பையிலே " என பாடி கொண்டாடி உழைத்து சேர்க்கிறோம் செல்வத்தை, என் தாத்தா குடிசையில் வாழ்ந்தார் , நான் அழகிய வீட்டில் வாழ்கிறேன் , என் மக்கள் அரண்மனையில் தான் வாழ வேண்டுமென ஓடி ஓடி உழைக்கிறோம்! ஆனால் அவர்கள் உயிரோடு வாழ வேண்டுமே என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு ஒன்று தெரியுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை ( I.C.M.R) தற்போது இதை கூறியுள்ளது " இந்தியநாட்டில் 40 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் காற்று மாசுபாட்டால் வருகிறது.இந்நிலை தொடர்ந்தால் 60 சதவிகிதம் வரை குழந்தைகள் மரணம் நடக்க வாய்ப்புள்ளதாம் நுரையீரல் புற்றுநோயால், இன்னும் ஓர் தகவலையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை கூறியுள்ளது "1990 முதல் 2010 வரை காற்றில் வெளிக்காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் முன்பெல்லாம் 50-60 வயது நோயாளிகளை பாதித்து வந்த நுரையீரல் புற்றுநோய் தற்போது 28 வயது நிரம்பிய இளைஞர்களை பாதித்து வருகிறதாம் " என்ற அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது.இத்தகைய பாதிப்பிற்கு யார் காரணம்? நாம் தானே? இருக்க இடம் வேண்டுமென காடுகளை அழித்தோம்! உண்ண உணவு என இயற்கையை சுரண்டுகிறோம் . இதையெல்லாம் தாண்டி பெருவணிக நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் துரித உணவுகள் விற்க தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் நம் குழந்தைகள் மனதை மூளைச்சலவை செய்து இயற்கை உணவுகளை சத்துள்ள உணவுகளை மக்கள் மனதைவிட்டு ஓட செய்து விட்டார்கள்.நம் நாட்டில் துரித உணவு உணவகங்கள் அதிகம் இயற்கை உணவகங்களை தேட வேண்டியுள்ளது விளைவு " புவிவெப்பமயமாதல்" இதனால் நம் நாட்டில் கரியமில வாயு அளவு பெருமளவு உயர்ந்து விட்டது விளைவு சராசரி வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று சார்ந்தே இருக்கிறது ‌‌.இதனை எல்லாம் நாம் மறந்து விட்டோம் ‌நாம் வாழ வேண்டும் என்ற சுயநலமிகளாக வாழ்கிறோம்.1974 தொடங்கி தற்போது வரை 47 ஆண்டுகளாக உலக சுற்றுச்சூழல் தினம் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் நம்மை ஊக்குவிக்கவுமே கொண்டாடப்படுகிறது.இப்போதவது நாம் செயலாற்ற வேண்டும் இல்லையேல் பல மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

"நாடுகள் வாழ காடுகள் தேவை.காடுகளை காக்க நேரம் இல்லாவிட்டாலும் மரம் ஒன்றாவது நடுங்கள், மரம் நட இடமில்லாதோர் மாடித்தோட்டம் அமைத்திடுக" " ஆலும் வேலும் பல்லுக்குறுதி " என்ற பழமொழி உங்களுக்கு தெரியும்.இந்த பழமொழி சொல்வது போல அரசமரம், ஆலமரம் மற்றும் வெப்பமரங்களை அதிகளவில் நடுங்கள் இவை அதிக அளவு உயிர்வளியை தரும் மரங்களாகும் . நம் சங்கதிகள் வாழ வீடும் செல்வமும் சேமிப்பது மட்டும் நம் இலக்கு அல்ல, அவர்கள் வாழு இயற்கையையும் , காற்றையும் சேமிப்பதும் மிக மிக இன்றியமையாதாகும் . எனவே மரம் வளர்ப்போம்! அதுவே நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு சுத்தமான காற்றும் ! மாசில்லா உலகமுமே ஆகும் .

- இரா. முத்து கணேஷ்
 ஆசிரியர்

Friday, June 4, 2021

+2 மாணவர்கள் எதிர்காலம் காக்கபடட்டும்

இப்போதைய தமிழகத்தின் பேசுபொருள் என்பதை தாண்டி தமிழக எதிர்காலத்தின் கேள்வியாகவும் உள்ளது +2 தேர்வு.பலரும் மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துள்ளது அதுபோல அறிவிப்பு வெளியிட வேண்டும் என கூறுகின்றனர் அவர்கள் யார்? என சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வீட்டில் +2 மாணவர்கள் இல்லை மற்றும் அவர்கள் மத்திய அரசின் அபிமானிகளாகவும் இருப்பார்கள்.உண்மை என்ன எனின் 1 ஆண்டு படிக்க வேண்டிய பாடத்தை தற்போதைய +2 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக இணைய வகுப்புகள், நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகள் மூலம் சிறப்பாக கல்வி பெற்றுள்ளார்கள்.நமது மாநிலத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பு காரணமாக பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் 100 க்கு 150 சதவீதம் நம் மாணவர்களிடம் கற்றல் நடைபெற்றுள்ளது.ஆகவே கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது தமிழக அரசின் செயல்பாடு இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.இச்சூழலில் பிற மாநிலங்களைப் போல் இல்லாமல், நம் தமிழக அரசுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கிறது எந்த மாநிலமும் செய்யாத வகையில் இது அரசின் சிறந்த முன்னெடுப்பு .

பிற மாநிலங்கள் போல் இன்றி நமது மாநிலத்தில் அரசு,அரசு- உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம்.ஓர் தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் என தேர்வு நடத்தினாலும் , நமது மாநிலத்தில் பல பள்ளிகளில் இடம் மீதம் இருக்கும் ‌எற்கனவே அரசு திடம்மிட்டு இருந்தது போல செப்டம்பர் மாதம் அரசுபோது தேர்வுக்கு சரியாக இருக்கும்.அது மட்டும் இன்றி ஓர் வேலை தேர்வு ரத்து ஏற்படின் பல தனியார் பள்ளிகளில் பணம் பெற்று மாணவர்களுக்கு மதிப்பெண் உயர்த்தி வழங்கிட வாய்ப்பு உள்ளது.அது மட்டுமின்றி பல அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்களை மாணவர்களிடம் பார்த்து எழுதி அதன் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட நிகழ்வுகளும் நடந்து உள்ளது.இதனால் நன்றாக படித்து மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் பல மாணவர்கள் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.வரும் காலத்தில் இந்த நிகழ்வு எடுத்துகாட்டாகி மாணவர்களிடம் கல்வி , தேர்வு பயம் இருக்காது மந்தநிலை உருவாகும் . இதன் பாதிப்பு பிற்காலத்தில் எல்லா துறைகளிலும் எதிர் ஒலிக்கும்.பணம் படைத்தோர் மற்றும் அதிகார பலம் படைத்தோர் மட்டுமே பணி பெறும் சூழல் உருவாகும் இளைஞர் திறன் குறையும் ‌‌.சமுகநீதி கேள்வி குறியாகும்‌

மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை தான் ரத்து செய்துள்ளது நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.நாம் அரசு போதுத்தேர்வை ரத்து செய்வதால் நம் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை.நாளைய தமிழகத்தின் எதிர்காலத்தை காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள், சான்றோர்,பெற்றோரோடு கலந்து ஆலோசித்து எந்த ஒரு மாணவரின் எதிர்காலமும் பாதிக்காத வண்ணம் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி மற்றும் மதிநுட்பம் சிறந்தது என்பதே நம் திராவிட அரசுகளின் சாதனையாக உள்ளது.இந்த சாதனை மேலும் தொடர ,கொரோனா ஏற்படுத்திய சோதனையை மதிநுட்பத்தோடு கையாள்க! மாநில சுயாட்சி சிந்தனை உள்ள மாநிலம்! மாணவர்கள் எதிர்காலம் காக்கபடட்டும் ! நீட் ஒழிக்கபடட்டும் ! 

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்

வாசிப்போம் வளர்வோம்!

நீங்கள் சிறப்பானவர்கள் உங்களிடம் ஓர் சிறந்த தகுதி உள்ளது ‌.எவரிடமும் இல்லாத ஓர் தகுதி!வெகுமதியான தகுதி! வெறும் மதியாளர்களிடம் இல்லாத தகுதி ! சிறப்புகளை தரும் தகுதி! அது என்ன தகுதி? என நீங்கள் கோபத்தின் மேல் சென்று உங்கள் மனம் கேட்கும் கேள்வி எனக்கும் கேட்கவே செய்கிறது.அது என்ன தகுதி தெரியுமா? நண்பர்களே ! வாசிப்பு தகுதி தான் நண்பர்களே ! தற்போது நீங்கள் வாசிக்க கூடிய அந்த தகுதி தான் நண்பர்களே! வாசிப்பு எனும் சிறந்த பழக்கம் அலைபேசிக்குள் ஆமை போல் சுருங்கி விட்டது.அலைபேசிக்கும் ஆமைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள் அல்லவா நீங்கள் ?

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் நினைவு வரும் கற்றோர்க்கு , ஆமை தற்காத்துக் கொள்ள தன் ஐம்புலன்களை அடக்கும்.தந்தை பெரியார் " இனிவரும் உலகம் " எனும் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் " தூரத்தில் இருக்கும் உருவத்தை மிக அருகில் வைத்து காணும் நிலை வருங்காலத்தில் வரும் " என்று சிந்தித்து சொன்னார்கள். நீயூட்டனும் ஆப்பிள் விழுந்ததை கண்டு பசி கொள்ளாது சிந்தித்ததாலே புவியீர்ப்பு விசை பிறந்தது.இப்பெரும் மனிதர்களுக்கு இந்த சிந்தனையை தந்தது எது என பார்த்தால் வாசிப்பும், வாசிப்பால் பெற்ற கல்வியறிவுமே ஆகும் ‌.

வாசிப்பு தனித்துவம் படுத்துகிறது மனிதர்களை , வாசிப்பு புகழின் உச்சிக்கு ஏன் அவர்கள் வாழும் தெருக்களுக்கும் கூட பெயராக்கி தருவதும் வாசிப்பே ஆகும்.அண்ணா நகர் , வள்ளுவர் நகர் , ஔவை நகர் , வால்மீகி நகர் , பெரியார் நகர் என தமிழ்நாட்டில் நம் தாய்மொழியால் தாய்மொழி  மூலம் வாசிப்பதால் சிறப்பு பெற்ற சிலரை மட்டுமே கூறி இருக்கிறேன்.வாசிப்பால் மேன்மை பெற்றோர் பலர் பாரினில் உண்டு.அதனாலே வள்ளுவரும்

" தொட்டனைந்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைந்தூறும் அறிவு"

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"

" கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"

என பல குறட்பாக்களை சிந்தித்தே நாம் வாசித்திட வேண்டுமென வாசிப்பை சுவாசமாய் நாளும் தொடர வேண்டுமென வள்ளுவ பெருமகனார் தந்துள்ள சான்றுகள் பல.

இந்த வாசிப்பும் கல்வியறிவும் ஒருபோதும் நமக்கு எளிதாக கிடைக்கவில்லை!ஒரு சாரார்க்கு மட்டுமென இருந்த கல்வி ஒரு மொழிக்கு மட்டுமே கல்வி என்ற உண்மை நிகழ்வுகளும் நம்மிடம் இருக்கத்தான் செய்தது. சமஸ்கிருதம் கற்று இருந்தால் மட்டுமே மருத்துவராகலாம் என்ற நிலை ஓர் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது. பட்டமளிப்பு விழாக்கள் கூட கற்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கிடையாது.ஏன் காலத்தில் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்கள் அனைவரும் படிக்க வேண்டுமென நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று இருக்கிறார்கள்.எல்லா சமூக மாணவர்களும் உயர் கல்வி பெற தலைநகரான சென்னை செல்வார்கள் ஆனால் விடுதிகள் இருந்ததோ ஒரு சிலருக்கு மட்டுமே! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஏற்படுத்திய விடுதிகளாலே கல்வியும் மேன்மையும் பெற்றோர் பல இலட்சமாணவர்கள் உண்டு.இவ்வாறு தொடங்கிய நம் தமிழக மாணவர்கள் சிந்தனை வளர்ச்சியை மதிநுட்பத்தை இந்திய நாடுகள் அல்ல ! உலக நாடுகளே! இன்று தேடித்தேடி வருகிறது.நம் இருண்ட காலம் கற்ற  கல்வியாலே உதயமாகி உள்ளது.

சரி இக்கால காட்சி ஊடகம் வந்த பின்னர் அலைபேசிக்குள் நாம் சுருண்டு விட்டோம் ! சுருக்கி கொண்டோம் ! நம் அறிவை , எதிர்காலத்தை சுருக்கி கொண்டோம் ! ஆழ்மனதிலுள்ள வக்கிரங்கள் டீக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராமாக வருகிறது ‌.தேடித்தேடி கற்க வேண்டிய நாம் முகம் தெரியாத நபர்களை தேடி அது பெருமை என நினைக்கிறோம்.புத்தகம் பல அலைபேசியில் இலவசமாய் கோப்புகளாக குவிந்துள்ளது என்போர் பலர் அவர்களே தன் வீட்டை தானே அணுகுண்டால் தகர்போர் ஆவார்.புத்தக கோப்புகளால் இப்போது பல கண் மருத்துவமனைகள் அதிகமாயிற்று! தலைக்குள் உள்ள மூளைக்கு கல்வி கனம் வாசிப்பின்மையால் குறைந்து மூக்கின் மேல் கண்ணாடியாக கனம் கூடியுள்ளது ! பலர் பொற்காலங்களை அலைபேசிகள் உண்டு விட்டது.இவை எல்லாம் மாறிட வேண்டும் என்றால் நாம் முதலில் கையில் புத்தகங்களை எடுக்க வேண்டும். கற்போம் நல்ல நூல்களை ! வாசிப்போம் தினம் தினம் ! கிடைக்கும் நல்ல எதிர்காலம் வரமாய் தொடர் வாசிப்பால்! வாசிப்போம் வளர்வோம் !

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்